விம்பிள்டன் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியில் மகளிர் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெதானி மாடெக் சாண்ட்ஸ் ஜோடி, சிலியின் அலெக்ஸா - அமெரிக்காவின் டெசிரே ஜோடியை எதிர்கொண்டது. இதில் 7-5, 6-3 என நேர் செட்களில் வென்று சானியா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. சானியா மிர்சா, 2015-ல் விம்பிள்டனில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றார். ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.
எனினும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - திவிஜ் சரண் ஜோடி தோல்வியடைந்தது. முதல் சுற்றில் ஃபின்லாந்தின் ஹென்றி கொன்டினன் - ஃபிரான்ஸின் ரோஜர் வேஸலின் ஜோடி, இந்திய ஜோடியை 6-7, 4-6 என நேர் செட்களில் தோற்கடித்தது.