

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்து பிரபல இலங்கை பேட்ஸ்மேன் குசால் பெரேரா விலகியுள்ளார்.
இலங்கை ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக குசால் பெரேரா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். 30 வயது குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்டுகள், 107 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். வங்கதேசத்தில் அந்நாட்டுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-2 எனத் தோல்வியடைந்தது குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி. அதன்பிறகு இங்கிலாந்தில் விளையாடிய ஒருநாள், டி20 தொடர் என இரண்டிலும் குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணிக்குத் தோல்வியே கிடைத்தது.
இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குசால் பெரேரா, இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் இடம்பெற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. பயிற்சியின்போது வேகப்பந்துவீச்சாளர் பினுரா ஃபெர்னான்டோவுக்குக் காயம் ஏற்பட்டதால் அவரும் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்படுகிறார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடர் ஜூலை 18 அன்று தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.