இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் இசுரு உடானாவுக்குப் பதிலாக கசுன் ரஜிதா இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை.
வழக்கம்போல இந்தமுறையும் முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்க இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறினார்கள். இலங்கை அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்தது. ஆனால் மினோத் பனுகா 36 ரன்களில் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பனுகா முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சஹால்.
70 பந்துகளில் அரை சதமெடுத்த அவிஷ்கா, புவனேஸ்வர் பந்துவீச்சில் கிருனால் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த தனஞ்ஜெயா டி சில்வா, சஹார் பந்துவீச்சில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.
கேப்டன் தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் பெரிதளவில் ரன் குவிக்காமல் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு சரித் அசலங்காவுடன் சமிகா கருணாரத்னே இணைந்தார். இந்த இணை 50 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் அடித்து விளையாடி வந்த அசலங்கா 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடந்த ஆட்டத்தைப்போல் கருணாரத்னே இந்த ஆட்டத்திலும் இறுதியில் சற்று துரிதமாக ரன் சேர்க்க அணியின் ஸ்கோர் 250 ரன்களைத் தாண்டியது.
புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் துஷ்மந்தா சமீராவை (2) ஆட்டமிழந்தார். முதல் பந்திலேயே லக்ஷ்ன் சண்டக்கன் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார்.
எனினும் கடைசி 2 பந்துகளுக்கு ஸ்டிரைக்குக்கு வந்த கருணாரத்னே 2 பவுண்டரிகளை விளாசி சிறப்பான பினிஷிங்கை தந்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 33 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணித் தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.