மைதானத்திலேயே சண்டை: இலங்கை கேப்டன், பயிற்சியாளர் விடியோ வைரல்
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்ததையடுத்து, இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா மற்றும் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சண்டை போட்டுக்கொண்ட விடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. 276 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 193 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. எனினும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய தீபக் சஹார் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
ஒரு கட்டத்தில் இலங்கை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்து வந்த நிலையில், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் இணை 8-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆட்டம் நிறைவடைந்தவுடன் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவும், பயிற்சியாளர் மிக்கி அர்தரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.