இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 42.3 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இலங்கை அணி மூன்று புதுமுகங்களுடன் களமிறங்கியது.
இங்கிலாந்து ஆதிக்கம்:
இலங்கை தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஸ்ஸன்கா மற்றும் கேப்டன் குசால் பெரேரா தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். கிறிஸ் வோக்ஸ் தொடக்கம் முதலே பந்துவீச்சில் அசத்தத் தொடங்கியதால் நிஸ்ஸன்கா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலன்காவை (0) டேவிட் வில்லி வீழ்த்தினார். அடுத்து தசுன் ஷனாகா (1) விக்கெட்டை மீண்டும் வோக்ஸ் வீழ்த்தினார். இதனால், இலங்கை அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
கேப்டன் குசால் மற்றும் ஹசரங்காவின் அசத்தல் பாட்னர்ஷிப்:
ஆனால், குசால் பெரேரா துரிதமாக ரன் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். வநிந்து ஹசரங்கா ஒத்துழைப்பு தந்து விளையாட இலங்கைக்கு பாட்னர்ஷிப் அமைந்தது. இருவரும் அரைசதத்தைக் கடக்க ரன் ரேட்டும் சீராக உயர்ந்தது.
4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த நிலையில் ஹசரங்கா 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து மீண்டும் ஆதிக்கம்:
ஹசரங்கா விக்கெட்டுக்குப் பிறகு இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. தனஞ்ஜெய லக்ஷன் (2), ரமேஷ் மெண்டிஸ் (1), பொறுப்பாக விளையாடிய கேப்டன் பெரேரா (73), பெர்னான்டோ 2, சமீரா 7 என இங்கிலாந்து பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர்.
கருணாரத்னே கடைசி கட்டத்தில் ஓரளவு ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், ஜெயவிக்ரமா கடைசி விக்கெட்டாக 4 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.
42.3 ஓவர்களில் இலங்கை அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கருணாரத்னே 19 ரன்கள் எடுத்தார்.
பெரேரா, ஹசரங்கா, கருணாரத்னே தவிர்த்து மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.