இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
நார்த் சவுண்டில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் குணதிலகா 96 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார். விக்கெட் கீப்பர் தினேஷ் சண்டிமல் 71 ரன்களும் டி சில்வா அதிரடியாக விளையாடி 47 ரன்களும் எடுத்து இலங்கை அணிக்கு நல்ல ஸ்கோர் கிடைக்க உதவினார்கள். மே.இ. தீவுகள் அணித் தரப்பில் ஜேசன் முகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய மே.இ. தீவுகள் அணிக்கு அபாரமான தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர்களான எவின் லூயிஸும் ஷாய் ஹோப்பும் 37.2 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஷாய் ஹோப் 84 ரன்களிலும் எவின் லூயிஸ் 103 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். கடைசியில் 18 பந்துகளில் 31 ரன்களும் கடைசி ஓவரில் 9 ரன்களும் வெற்றிக்குத் தேவைப்பட்டன. நிகோலஸ் பூரண் சிறப்பாக விளையாடி 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இலக்கை அடைய உதவினார். மே.இ. தீவுகள் அணி 49.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகித்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.