உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி இன்று இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தில்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் அணிகள் பிரிவில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவிலுமே இந்தியா தங்கம் வென்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மானு பேக்கர் - செளரப் செளத்ரி ஆகிய இருவரும் தங்கம் வென்றார்கள். இறுதிச்சுற்றில் ஈரான் இணையை 16-12 என்கிற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்கள். இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணி 5-வது தங்கப் பதக்கத்தை வென்றது.
இதற்கு முன்பு இன்று நடைபெற்ற கலப்பு 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த திவ்யான்ஷ் சிங் பன்வார் - இளவேனில் ஆகிய இருவரும் ஹங்கேரி இணையை 16-10 என்கிற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்கள்.
பதக்கப் பட்டியலில் இந்திய அணி 12 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.