வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை இந்திய டெஸ்ட் அணிக்கும் தேர்வுக்குழுவினர் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான கர்நாடகத்தைச் சேர்ந்த பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். நேற்றைய ஆட்டத்தில் இரு விக்கெட்டுகளை எடுத்தார். இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா பற்றி முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:
சீம் அப் வகைப் பந்துவீச்சுகளைப் பார்க்கும்போது, பிரசித் கிருஷ்ணாவை இந்திய டெஸ்ட் அணிக்கும் தேர்வுக் குழுவினர் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
25 வயது பிரசித் கிருஷ்ணா 9 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.