கேல் ரத்னா விருதுக்கு நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ் உள்பட 11 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இதன்படி 2017 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைத்தன.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
கேல் ரத்னா விருதுக்காக அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரையும் அர்ஜுனா விருதுக்காக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பேட்ஸ்மேன்கள் கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகியோரின் பெயர்களையும் பிசிசிஐ பரிந்துரைத்தது.
இந்நிலையில் நீரஜ் சோப்ரா, ரவி தாஹியா, ஸ்ரீஜேஷ், லவ்லினா, சுனில் சேத்ரி, மிதாலி ராஜ், பிரமோத் பகத், சுமித் அண்டில், அவனி லெகாரா, கிருஷ்ணா நாகர், நார்வால் ஆகிய 11 வீரர்களின் பெயர்கள் கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் 35 வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.