அனைத்து ரக கிரிக்கெட்டிலிருந்தும் மலிங்கா ஓய்வு!

யார்க்கர் பந்துக்குப் பெயர்போன லசித் மலிங்கா அனைத்து ரக கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


யார்க்கர் பந்துக்குப் பெயர்போன லசித் மலிங்கா அனைத்து ரக கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மலிங்கா.

இலங்கையின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கா கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டி20 உலகக் கோப்பையில் இலங்கையை வழிநடத்த கடந்தாண்டு தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். 

ஆனால், கரோனா காரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்தாண்டு அக்டோபர், நவம்பரில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் அணியும் இரண்டு நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் மலிங்கா பதிவிட்டுள்ளது:

"அனைத்து ரக கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். இந்தப் பயணத்தின்போது எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. வரும் காலங்களில் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்வதை எதிர்நோக்கி இருக்கிறேன்.

எனது டி20 காலணிகளுக்கு முழுமையான ஓய்வளிக்க விரும்புகிறேன். எனினும், விளையாட்டின் மீதுள்ள எனது அன்பு ஒருபோதும் ஓய்வைத் தேடாது."

84 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள மலிங்கா 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 122 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் மலிங்கா.

2014-இல் டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கையின் கேப்டனாக மலிங்கா இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com