பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்ததால் மனவலிமை பெற்று யு.எஸ். ஓபன் பட்டத்தை வென்றதாக எம்மா ரடுகானு கூறியுள்ளார்.
யு.எஸ். ஓபன் போட்டியில் இரு பதின்ம வயது வீராங்கனைகள் அரையிறுதி ஆட்டங்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்கள். தரவரிசையில் 73-ம் இடத்தில் இருந்த கனடாவைச் சேர்ந்த 19 வயது லேலாவும் 150-வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் 18 வயது எம்மா ரடுகானுவும் இறுதிச்சுற்றில் மோதியதில் எம்மா ரடுகானு யு.எஸ். ஓபன் மகளிர் சாம்பியன் ஆனார். இன்று வெளியிடப்பட்டுள்ள டபிள்யூடிஏ தரவரிசையில் 150-வது இடத்தில் இருந்த எம்மா ரடுகானு, 127 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தன்னுடைய வெற்றி குறித்து எம்மா கூறியதாவது:
என்னுடைய வளர்ப்புமுறையில் என் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். என்னுடைய சிறு வயதில் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டார்கள். அதுதான் என்னை நல்வழிப்படுத்தியது. உலகளவில் பெரிய தருணங்களில் இடம்பெறும்போது அந்த வளர்ப்பு எனக்கு உதவுகிறது. சிறுவயதிலிருந்தே மன வலிமை கொண்டவளாகவே பெற்றோர் என்னை வளர்த்தார்கள். அவர்கள் தீவிரமான விமர்சகர்கள். அவர்களைத் திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்காக இந்த யு.எஸ். பட்டத்தை வென்றுள்ளேன். வெற்றிக்குப் பிறகு பெற்றோரிடம் பேசியது மகிழ்ச்சியை அளித்தது. என்னைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டார்கள் என்றார்.