இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக முயற்சிக்கவுள்ளன. முதலிரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் எனப் பெயர் பெற்றுள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம், நரேந்திர மோடி மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் தான் 3-வது மற்றும் 4-வது டெஸ்டுகளும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளன. இந்த மைதானத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்துள்ளார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், லாரன்ஸ், ஸ்டோன், மொயீன் அலிக்குப் பதிலாக ஆண்டர்சன், ஆர்ச்சர், பேர்ஸ்டோவ், கிராவ்லி ஆகியோரும் இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள்.