ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் காயம் காரணமாக களமிறங்காத ஜாஸ்பிரித் பூம்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று (திங்கள்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முழுவதும் இந்திய அணி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தது. 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் பூம்ரா மற்றும் அஸ்வின் காயம் காரணமாக அவதிப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, 4-வது டெஸ்டில் இருவரும் களமிறங்கவில்லை. இந்த நிலையில், இருவரும் இன்று பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு இந்திய அணி அடுத்த மாதம் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. உலக சாம்பியன்ஷிப் தொடரில் மிகவும் முக்கியமான தொடர் என்பதால் இந்திய அணியின் கவனம் அதில் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் இருவரும் மீண்டும் பயிற்சியை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருவரும் பயிற்சி மேற்கொள்ளும் விடியோவை இந்தியக் கிரிக்கெட் அணி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.