தமிழக அரசு தனக்கு ஒரு வேலையை ஏற்படுத்தித் தரவேண்டும் என டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான தமிழக வீராங்கனை தனலட்சுமி சேகர் கூறியுள்ளார்.
டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ், ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிா் ஆகியோா் உள்ளார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
இதையடுத்து திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
வணக்கம். நான் தனலட்சுமி. திருச்சியிலிருந்து வருகிறேன். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 4*400 கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காகத் தேர்வாகியுள்ளேன். எனக்கு இது மகிழ்ச்சியாக உள்ளது. என் நன்றியைப் பயிற்சியாளருக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்துள்ளார். பதக்கங்கள் பெற்று இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்துவேன். தமிழக அரசு எனக்கு ஒரு வேலை வழங்கினால் உபயோகமாக இருக்கும். ஒரு போட்டிக்குச் சென்றால் எனக்கு ரூ. 20,000 செலவாகும். எனக்கு வேலை கிடைத்தால் எனக்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்வேன். எனவே தமிழ்நாடு அரசு எனக்கு ஒரு வேலை கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.