தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
டப்லினில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அயர்லாந்து அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான ஆண்டி பால்பிர்னி 102 ரன்களும் ஹாரி டெக்டர் 79 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. அணியில் ரபாடா, நோர்கியா, கேஷவ் மஹாராஜ், சம்ஷி என முக்கியப் பந்துவீச்சாளர்கள் இருந்தும் அயர்லாந்து அணி சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியது.
இதன்பிறகு பேட்டிங் செய்த பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, 48.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மலான் 84 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய 7 ஆட்டங்களில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது அயர்லாந்து அணி.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என அயர்லாந்து முன்னிலை வகிக்கிறது. முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் ரத்தானது. கடைசி ஒருநாள் ஆட்டம் வெள்ளியன்று நடைபெறுகிறது.