சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 (பிஎஸ்எல்) போட்டி அபுதாபியில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்ற ஏழு பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இவர்களில் ஆறு பேர் வீரர்கள். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அணி உரிமையாளர்களும் கலந்து பேசி, பிஎஸ்எல் போட்டியை ஒத்திவைப்பது எனக் கடந்த மார்ச் 4-ல் முடிவெடுத்தார்கள். இந்த வருட பிஎஸ்எல் போட்டியின் 34 ஆட்டங்களில் 14 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அனைத்து ஆட்டங்களும் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெற இருந்தன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும் மீதமுள்ள 10 லீக் ஆட்டங்களும் நான்கு பிளேஆஃப் ஆட்டங்களும் லாகூரில் நடைபெற இருந்தன. கரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 ஆட்டங்களும் எப்போது நடைபெறும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கவுள்ளது.