சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரௌண்டர் சாம் கரன் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்துள்ளதாக அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ரத்தான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபை வந்தனர். இங்கிலாந்து, இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடிய சாம் கரன் அவர்களுடன் வரவில்லை.
இதனால், சாம் கரன் வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், அவர் புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார். அவரது வருகையை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அவர் 6 நாள்கள் தனிமையில் இருக்கவுள்ளதால், மும்பை இந்தியன்ஸுடனான முதல் ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார். ஏற்கெனவே, பாப் டு பிளெஸ்ஸி காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஏராளமான சவால்கள் உள்ளன.