சென்னையில் நடைபெறும் கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்துகொண்ட அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சென்னையில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது கிக் பாக்ஸிங் வீரர் யோரா டேட் கலந்துகொண்டார். ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற போட்டியின்போது யோரா டேட்டின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள்களாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி யோரா டேட் நேற்று மரணமடைந்தார்.
கிக் பாக்ஸிங் போட்டியில் உயிரிழந்த வீரருக்குத் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினார். பிறகு ட்விட்டரில் அவர் கூறியதாவது:
சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் கலந்து கொண்ட அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதே ஆன கிக் பாக்ஸிங் வீரர் யோரா டேட் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.