சிராஜ்
சிராஜ்

தடுமாறும் வங்கதேசம்: பேட்டிங்கில் அஸ்வின், பந்துவீச்சில் குல்தீப் யாதவ் அசத்தல்!

2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
Published on

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2-ம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் நாளன்று 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இன்று ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு இந்திய அணிக்குக் கூடுதல் ரன்களைப் பெற்றுத் தரும் பொறுப்பை அஸ்வினும் குல்தீப் யாதவும் ஏற்றுக்கொண்டார்கள். அஸ்வின் 58 ரன்களும் குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தது. தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

வங்கதேச அணியின் இன்னிங்ஸில் முதலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினார்கள். முதல் 4 விக்கெட்டுகளில் மூன்று சிராஜுக்கும் ஒரு விக்கெட் உமேஷ் யாதவுக்கும் கிடைத்தன. இதன்பிறகு குல்தீப் யாதவின் பந்துவீச்சு, வங்கதேச பேட்டர்களை மிரள வைத்தது. அடுத்த 4 விக்கெட்டுகளையும் எடுத்து தன் திறமையை நிரூபித்தார் குல்தீப் யாதவ். இதனால் 102 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி. 

2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. மெஹித் ஹசன் 16, எபடாட் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். குல்தீப் யாதவ் 4, சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 271 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com