ஆஷஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி விலகல்
ஆஷஸ் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 0-4 எனத் தோற்றது இங்கிலாந்து. இதையடுத்து இந்தத் தோல்வியிலிருந்து இங்கிலாந்து அணி மீண்டெழுவது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் பரிந்துரைகளின்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) நடவடிக்கை எடுக்கவுள்ளது.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட்டும் உதவிப் பயிற்சியாளராக கிரஹாம் தோர்ப்பும் பணியாற்றினார்கள். ஆஷஸ் தோல்வியால் அவ்விருவரையும் நீக்கிவிட்டு தற்காலிகப் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்டை ஈசிபி நியமிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஆஷஸ் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் விலகியுள்ளார். இதையடுத்து புதிய நிர்வாகிகளின் தலைமையில் இங்கிலாந்து அணி புதிய பயணத்துக்குத் தயாராகியுள்ளது. கைல்ஸ் பதவி விலகலால் கிறிஸ் சில்வர்வுட்டின் பயிற்சியாளர் பொறுப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து ஆடவர் அணியின் நிர்வாக இயக்குநராக ஆஷ்லி கைல்ஸ் கடந்த மூன்று வருடங்களாகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் ஆனது. மிகச்சிறந்த டி20 அணியாக விளங்குவதோடு டெஸ்ட் தரவரிசையில் 4-ம் இடத்திலும் நீடிக்கிறது. மேலும் இங்கிலாந்து ஆடவர் அணி யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 24 வருடங்களில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

