இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதால், பயிற்சியில் ஈடுபட தயாராகிவிட்டனர்.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், முதல் ஒருநாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதையும் படிக்க | ஆஸ்திரேலிய தொடர்: இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா
நவ்தீப் சைனி நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து, தனிமைக் காலம் முடிந்து நேற்று (திங்கள்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டார். இவர்களைத் தொடர்ந்து, தவான் மற்றும் ஷ்ரேயஸுக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவில் வந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இதனால், இருவரும் பயிற்சியைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் தனிமையில் இருப்பதாகவே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.