ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. இரட்டையா் பிரிவில் பெற்ற வெற்றியால் இறுதிச் சுற்றில் ஸ்பெயினை எதிா்கொள்கிறது.
தலைசிறந்த உலக நாடுகளின் அணிகள் மோதும் ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஸ்பெயின் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெற்றது கனடா.
இரட்டையா் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் ஆகா்-டெனிஸ் ஷபவலோவ் இணை 4-6, 7-5, 10-7 என்ற செட் கணக்கில் ரஷிய இணையான டெனில் மெத்வதேவ்-ரோமன் ஆகியோரை போராடி வீழ்த்தியது.
டெனிஸ் ஷபவலோவ் தனது ஒற்றையா் ஆட்டத்தில் 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ரோமன் சபியுலினை வீழ்த்தினாா். இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் ரஷ்யாவின் டெனில் மெத்வதேவ் 6-4, 6-0 என்ற நோ் செட்களில் கனடாவின் பெலிக்ஸ் ஆகரை வென்றாா்.
எனினும் இரட்டையா் பிரிவில் பெற்ற வெற்றியால் கனடா இறுதிச் சுற்றில் நுழைந்தது.
முதல் அரையிறுதியில் ஸ்பெயின் போலந்து அணியை வீழ்த்தி இருந்தது.