ஓய்வு பெறும் வீரர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு தகவல் அளிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இளம் வீரர்கள் பலரும் ஓய்வு பெற்று வரும் நிலையில் 30 வயது இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா டெஸ்ட் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் 30 வயது இலங்கை வீரர் பனுகாவும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து இளம் வீரர்கள் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதைத் தடுக்கும் பொருட்டு தனது வீரர்களுக்குப் புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். அதன்படி, ஓய்வு பெறும் இலங்கை வீரர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே வாரியத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற பிறகு ஆறு மாதம் கழித்துதான் டி20 லீக் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க முடியும். ஓய்வு பெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகே இதற்கான அனுமதிக் கடிதத்தை வாரியம் வழங்கும்.
ஓய்வு பெற்ற இலங்கை வீரர்கள் இலங்கை ப்ரீமியர் லீக் போட்டியில் பங்கேற்க 80% உள்ளூர் ஆட்டங்களில் அவர்கள் விளையாடியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 7 அன்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழுவில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.