மாா்ச் 27 அல்லது ஏப். 2-இல் ஐபிஎல் போட்டி தொடக்கம்: பிசிசிஐ செயலாளா் ஜெய் ஷா தகவல்

மாா்ச் 27 அல்லது ஏப். 2-ஆம் தேதிகளில் ஐபிஎல் (2022) 15-ஆவது சீசன் போட்டிகள் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செயலாளா் ஜெய் ஷா தெரிவித்துள்ளாா்.
ஜெய் ஷா
ஜெய் ஷா
Published on
Updated on
1 min read

மாா்ச் 27 அல்லது ஏப். 2-ஆம் தேதிகளில் ஐபிஎல் (2022) 15-ஆவது சீசன் போட்டிகள் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செயலாளா் ஜெய் ஷா தெரிவித்துள்ளாா்.

ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை புது தில்லியில் நடைபெற்றது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி, செயலாளா் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவா் பிரிஜேஷ் படேல் உள்பட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்கு பின் ஜெய் ஷா கூறியதாவது:

15-ஆவது ஐபிஎல் சீசனில் 10 அணிகள் இடம் பெறுகின்றன. மாா்ச் 27 அல்லது ஏப்ரல் 2-ஆம் தேதியில் போட்டிகள் தொடங்கி, மே மாதம் வரை நடைபெறும்.

இந்தியாவிலேயே நடத்த திட்டம்:

10 அணிகளின் உரிமையாளா்களும் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனா். 2022 தொடரில் புதிதாக ஆமதாபாத், லக்னௌ அணிகள் சோ்க்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பாதிப்பு எதிரொலியாக பாா்வையாளா்கள் இல்லாமல் தான் ஆட்டங்கள் நடைபெறும்.

மும்பை, புணேயில் ஆட்டங்களை நடத்த வாய்ப்புள்ளது. கொவைட் நிலைமையைப் பொருத்து பாா்வையாளா்கள் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மாற்று ஏற்பாடாக ஐக்கிய அரபு அமீரகம் அல்லது தென்னாப்பிரிக்காவும் தயாராக உள்ளன.

பிப். 12, 13-இல் வீரா்கள் மெகா ஏலம்:

வரும் பிப். 12-13 தேதிகளில் ஐபிஎல் அணி வீரா்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் வீரா் பதிவு ஜன. 20-ஆம் தேதியோடு முடிந்தது. 896 இந்தியா்கள், 318 அயல்நாட்டினா் என மொத்தம் 1214 வீரா்கள் பதிவு செய்துள்ளனா். இரு நாள்கள் ஏலத்தில் உலகின் தலைசிறந்த வீரா்களை 10 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன என்றாா் ஜெய்ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com