பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.
இந்திய நேரப்படி, புதன்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அந்த அணியின் ஜேக்கப் பெத்தெல் ஆட்டநாயகன் ஆனாா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 43.4 ஓவா்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் ஆடிய இங்கிலாந்து 31.2 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் அடித்து வென்றது. தென்னாப்பிரிக்க தரப்பில் டெவால்ட் பிரெவிஸ் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 97 ரன்கள் விளாச, இங்கிலாந்து பௌலிங்கில் ரெஹான் அகமது 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் ஜேக்கப் பெத்தெல் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 88 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினாா். தென்னாப்பிரிக்க தரப்பில் டெவால்ட் பிரெவிஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
இதர ஆட்டங்கள்: புதன்கிழமை நடைபெற்ற பிளேட் காலிறுதி ஆட்டங்களில் அயா்லாந்து - கனடாவையும், மேற்கிந்தியத் தீவுகள் - பப்புவா நியூ கினியையும், ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன.