தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் 9-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம் தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி குறித்து ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன்படி, விராட் கோலிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், தகவலறிந்த பிசிசிஐ வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படலாம்" என்றனர்.
நடப்பு ஐபிஎல் சீசன் கேஎல் ராகுல் தவிர அனைவருக்கும் மோசமானதாகவே அமைந்துள்ளது. ரோஹித் சர்மா 218 ரன்களும், விராட் கோலி 216 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர். ரிஷப் பந்த் 294 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் பும்ரா 11 ஆட்டங்களில் 12 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா.
கேஎல் ராகுல் மட்டும் 2 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட 11 ஆட்டங்களில் 451 ரன்கள் குவித்துள்ளார்.
மூத்த வீரர்கள் யாரும் இல்லாததால், கேப்டன் பொறுப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. கோலி, ரோஹித், ராகுல் ஆகிய மூவரும் இல்லாத நேரத்தில் இலங்கை தொடரின்போது ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பை வகித்தார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹார்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருவதால், தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அணியின் கேப்டன் பொறுப்புக்கு பிசிசிஐ அவரையும் கருத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.