ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் காலிறுதியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். இணையம் வழியாக செப்டம்பர் 25 வரை இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 16 வீரர்களிலிருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, காலிறுதி ஆட்டத்தில் 17 வயது வின்சென்ட் கீமருடன் மோதினார். இந்தச் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கீமர், 3-1 என பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். இதையடுத்து அரையிறுதியில் கார்ல்சனுடன் கீமர் மோதவுள்ளார். பிரக்ஞானந்தாவுக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் கடைசி ஆட்டத்திலும் கீமர் வெற்றி பெற்றார். 2-வது, 3-வது ஆட்டங்கள் டிரா ஆகின. மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசி யூவை 3.5:2.5 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் லியம் லீயை எதிர்கொள்கிறார் அர்ஜுன் எரிகைசி.