பெங்களூரு: பெங்களூரு ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாகேத் மைனேனி/ராம்குமார் ராமநாதன் இணை அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது.
முன்னதாக, காலிறுதிச் சுற்றின் 4 ஆட்டங்களிலும் இந்திய ஜோடிகள் களம் கண்டிருந்தன. அதில் சாகேத்/ராம்குமார் இணையை சந்திக்க இருந்த கனடாவின் ஸ்டீவன் டியெஸ்/மாலெக் ஜாஸிரி இணை போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இதையடுத்து அரையிறுதிக்கு தகுதிபெற்ற சாகேத்/ராம்குமார் இணை, அதில் ஆஸ்திரேலியாவின் மார்க் போல்மான்ஸ்/ இங்கிலாந்தின் ஜே கிளார்க் ஜோடியை சந்திக்கிறது.
இந்த மார்க்/ஜே இணையிடம் தான் இந்தியாவின் பூரவ் ராஜா/ஜீவன் நெடுஞ்செழியன் இணை தனது காலிறுதியில் 2-6, 1-6 என்ற செட்களில் வீழ்ந்தது. இதர காலிறுதிச் சுற்றுகளில் யூகி பாம்ப்ரி/திவிஜ் சரண் ஜோடி 4-6, 3-6 என்ற செட்களில் ஆஸ்திரியாவின் அலெக்ஸாண்டர் எர்லர்/செக் குடியரசின் விட் கோப்ரிவா இணையிடம் தோற்றது.
விஷ்ணு வரதன்/ஸ்ரீராம் பாலாஜி இணை 4-6, 7-6 (7/2), 4-10 என்ற செட்களில் பிரான்ஸின் ஹியுகோ கிரெனியர்/அலெக்ஸாண்ட்ரே முல்லர் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இதனிடையே, இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் களத்திலிருந்த கடைசி இந்தியரான பிரஜனேஷ் குணேஸ்வரன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 2-6, 1-6 என்ற செட்களில் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியிடம் வீழ்ந்தார்.