நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது இந்திய மகளிர் அணி.
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய மகளிர் அணி . டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி.
2-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. மேக்னா 49 ரன்களும் ரிச்ச கோஷ் 65 ரன்களும் எடுக்க, கேப்டன் மிதாலி ராஜ் 81 பந்துகளில் 66 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து மகளிர் அணி ஆரம்பத்தில் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும் அமீலியா கெர்ரும் மேடி கிரீனும் நல்ல கூட்டணி அமைத்து இலக்கை கவனமுடன் விரட்டிச் சென்றார்கள். மேடி கிரீன் 52 ரன்கள் எடுக்க, அமீலியா கெர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 119 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். 12 பந்துகளில் 14 ரன்கள் தேவை என்கிற நிலைமையில் 49-வது ஓவரில் நியூசிலாந்து அணி 16 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்றது நியூசிலாந்து அணி.
ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.