கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

இத்தகவல் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ஃபீல்டிங் செய்தபோது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் இருந்தும் அவர் விலகினார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். 2020-ம் வருடம் தில்லி அணி, ஷ்ரேயஸ் தலைமையில் ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது. 

கடந்த வருட ஏப்ரல் மாதத்தில் தோள்பட்டைக் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஷ்ரேயஸ் ஐயர். மீண்டும் அவர் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாட வந்தாலும் ரிஷப் பந்த் தலைமையில் தான் தில்லி அணி விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் முதலிடம் வகித்தது. எனினும் அந்த அணி பிளேஆஃப்பில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

இந்நிலையில் இந்த வருடம் தில்லி அணி ஷ்ரேயஸ் ஐயரைத் தக்கவைக்கவில்லை. ஏலத்தில் பங்குபெற அவர் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயரை ரூ. 12.25 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா அணி. 

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் இயன் மார்கன் தலைமையில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது கொல்கத்தா அணி. எனினும் பேட்டிங்கில் மார்கன் சொதப்பியதால் இந்த வருட ஏலத்தில் கொல்கத்தா உள்பட எந்த அணியும் அவரைத் தேர்வு செய்யவில்லை. அடிப்படை விலை ரூ. 1.50 கோடி என்றபோதும் எந்த அணியும் அவரைச் சீந்தவில்லை. 

இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் தேர்வாகியுள்ளார். இத்தகவல் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com