3-0: ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இந்திய மகளிர் அணி

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. 
ஹர்மன்ப்ரீத் கெளர் (வலது)
ஹர்மன்ப்ரீத் கெளர் (வலது)


இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. 

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளது. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. மேலும் முதல் இரு ஒருநாள் ஆட்டங்களை வென்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 

3-வது ஒருநாள் ஆட்டம் பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 49 ரன்களும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 75 ரன்களும் பூஜா வஸ்த்ரகர் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்களும் எடுத்ததால் இந்திய மகளிர் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுக்க முடிந்தது. 27-வது ஓவரில் 124/6 என நெருக்கடியில் இருந்தபோது கெளரும் பூஜாவும் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இருவர் கூட்டணி 97 ரன்கள் எடுத்து இந்திய அணி கெளரவமான ஸ்கோரை அடைய உதவி செய்தது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 8-ம் நிலை மற்றும் அதற்குக் கீழே உள்ள பேட்டர்களில் அதிக அரை சதம் எடுத்தவர் (3) என்கிற பெருமையை பூஜா பெற்றுள்ளார். 

முதல் இரு ஒருநாள் ஆட்டங்களை விடவும் இலங்கையின் இன்றைய பேட்டிங் முன்னேறியிருந்தது. கேப்டன் சமரி 44 ரன்களும் நிலாக்‌ஷி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் எடுத்தார்கள். எனினும் இலங்கை அணி 47.3 ஓவர்களில்  216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியாவின் ராஜேஸ்வரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது. 3-வது ஆட்டம் மற்றும் தொடரின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வானார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com