ஐபிஎல் 2022 போட்டியில் கவனம் பெற்ற முகேஷ் செளத்ரி (சிஎஸ்கே), சேதன் சக்காரியா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 போட்டியில் விளையாடவுள்ளார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த முகேஷ் செளத்ரி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் 13 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகள் எடுத்தார். 2021-ல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான சேதன் சக்காரியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி 14 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வருடம் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 3 ஆட்டங்களில் மட்டும் விளையாடினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் நடைபெறும் கேஎஃப்சி டி20 மேக்ஸ் சீரீஸ் போட்டியில் முகேஷ் செளத்ரியும் சேதன் சக்காரியாவும் விளையாடவுள்ளார்கள். மேலும் இருவரும் பிரிஸ்பேன் மைதானத்தில் பயிற்சியும் பெறவுள்ளார்கள். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எஃப். நிறுவனத்துடன் இணைந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேற்கொள்கிறது. அத்திட்டத்தின் வழியாகவே முகேஷ் செளத்ரியும் சேதன் சக்காரியாவும் ஆஸ்திரேலியாவில் விளையாடும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார்கள்.