இலங்கையுடனான முதல் டி20 ஆட்டத்தில் வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்துள்ளனர்.
இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இலங்கைக்கு டாப் -3 வீரர்களான பதும் நிசன்கா, தனுஷ்கா குணத்திலகா மற்றும் சாரித் அசலங்கா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், பின்வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால், 19.3 ஓவர்களில் இலங்கை அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கையில் அதிகபட்சமாக அசலங்கா 38 ரன்களும், நிசன்கா 36 ரன்களும், குணத்திலகா 26 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேன் ரிச்சர்ட்சன் 1 விக்கெட் வீழ்த்தினார்.
129 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஃபிஞ்ச் மற்றும் வார்னர் களமிறங்கினர்.
இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த இணை வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை காட்டிலும் கூடுதலாக ரன் சேர்த்து விளையாடி வந்தது. இதனால், அணியின் வெற்றி மிகவும் எளிதானது.
வார்னர் அரைசதம் கடந்து 37 பந்துகளில் 58 ரன்கள் எடுக்க, ஃபிஞ்ச் 33 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக தடைபட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி 11.4 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 50 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.