வந்தவரெல்லாம் விளாசல்: இந்தியா 211 ரன்கள் குவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்துள்ளது.
வந்தவரெல்லாம் விளாசல்: இந்தியா 211 ரன்கள் குவிப்பு!
Updated on
1 min read


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே 13 ரன்கள் கிடைக்க, இருவரும் சீரான வேகத்தில் ரன் குவித்தனர்.

இதனால், பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்தது. பவர் பிளே முடிந்தவுடன் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ருதுராஜ் அடுத்த பந்திலேயே 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினார். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 10-ஐ தாண்டியது. இவருடன் கிஷனும் இணைந்து ருத்ரதாண்டவம் ஆட, தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா திணறினார்.

கிஷன் 36-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார். இதன்பிறகு, கேசவ் மகாராஜ் வீசிய 13-வது ஓவரில் கிஷன் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாச, அதே ஓவரின் கடைசிப் பந்தில்  76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரன் ரேட்டில் லேசான சரிவு ஏற்பட்டது.

நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயஸ் ஐயர், கடைசி நேர அதிரடிக்கு இல்லாமல் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால், புதிய கேப்டன் ரிஷப் பந்த் பிரமாதமான ஷாட்களால் பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினார். ஹார்திக் பாண்டியாவும் வந்த வேகத்தில் விளாசத் தொடங்கினார். இதனால், 19-வது ஓவரின் முடிவிலேயே இந்திய அணி 200 ரன்களைத் தாண்டியது.

அன்ரிச் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரிஷப் பந்த் (29) ஆட்டமிழந்தார். எனினும், அந்த ஓவரில் பாண்டியா ஒரு சிக்ஸர் அடிக்க இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 2 பந்துகளில் 1 ரன் எடுத்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ், அன்ரிச் நோர்க்கியா, வெய்ன் பார்னெல், ட்வைன் பிரிடோரியஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com