தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20யில் தினேஷ் கார்த்திக்குக்கு முன்பு அக்ஷர் படேலைக் களமிறக்கியது குறித்து இந்திய பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர் பதில் அளித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்க அணி, கட்டாக்கில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 34, ஷ்ரேயஸ் ஐயர் 40, தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்க அணி, 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் பவுமா 35 ரன்களும் கிளாசென் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 81 ரன்களும் எடுத்தார்கள்.
இந்திய அணியின் இன்னிங்ஸின்போது தினேஷ் கார்த்திக்குக்கு முன்பு அக்ஷர் படேல் களமிறங்கினார். இதனால் விமர்சனங்கள் எழுந்தன.இதற்குப் பதில் அளித்து இந்திய பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:
இதுகுறித்து முன்பே திட்டமிட்டிருந்தோம். ஏழு ஓவர்கள் இருந்தன. அக்ஷர் படேலால் சுலபமாக சிங்கிள்களை எடுக்கமுடியும். அப்போது யாராவது ஒருவர் களமிறங்கி உடனடியாக அடித்தாட வேண்டிய நிலைமையிலும் நாங்கள் இல்லை. அதை தினேஷ் கார்த்திக்கால் செய்ய முடியும் என்றாலும் கடைசி 5 ஓவர்களில் அவர் இந்திய அணியின் மதிப்புமிக்க வீரராக உள்ளார். அவரால் அச்சமயத்தில் உடனடியாக அதிரடியாக விளையாட முடியும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் அவரும் ரன்கள் எடுக்கச் சிரமப்பட்டார் என்றார்.