ஓய்வு பெறும் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட மொயீன் அலி: காரணம் என்ன?

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.
ஓய்வு பெறும் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட மொயீன் அலி: காரணம் என்ன?

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.

தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்டுகள், 112 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார் மொயீன் அலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2914 ரன்களும் 195 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்தார். எனினும் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள், டி20 ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகக் கூறினார். அப்போது, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது பற்றி மொயீன் அலீ கூறியதாவது: எனக்கு இப்போது 34 வயதாகிவிட்டது. என் விருப்பத்துக்கேற்ப கிரிக்கெட் ஆட்டங்களை நீண்ட காலம் விளையாட நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் அற்புதமானது. இதில் நீங்கள் சிறப்பாக விளையாடும்போது வேறு எந்த கிரிக்கெட்டை விடவும் இதில் அதிக திருப்தி கிடைக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை ரசித்து விளையாடினேன். ஆனால் அதன் தீவிரத்தன்மையால் சில நேரங்களில் அதிக உழைப்பு தேவைப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அளவு விளையாடிவிட்டேன் என நினைக்கிறேன். இங்கிலாந்து இஸ்லாமியர்கள் கிரிக்கெட்டில் ஈடுபட இனி நான் ஊக்கமாக இருப்பேன் என நினைக்கிறேன். இங்கிலாந்து வீரராக இல்லாவிட்டாலும் ஆம்லா எனக்கு அப்படித்தான் ஊக்கமளித்தார். என்னுடைய பெற்றோர், குடும்பத்தினர் என் கிரிக்கெட் பயணத்தில் மிகவும் ஒத்துழைத்தார்கள். அவர்களுக்கு நன்றி என்றார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார் மொயீன் அலி. இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் மெக்குல்லம் எப்போது என்னை அழைத்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் விளையாடத் தயார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான் இங்கிலாந்து அணியினருடன் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவது அற்புதமானது. பல வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு விளையாடச் செல்வதால் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு தொடராக அது அமையும். மெக்குல்லமிடம் நான் பேசினேன். பாகிஸ்தான் தொடர் பற்றி இருவரும் விவாதித்தோம். கதவு எப்போதும் திறந்திருக்கிறது. இதனால் நான் ஓய்வு பெறும் முடிவைத் திரும்பப் பெற்றதாக எண்ணிக்கொள்ளலாம். அவரிடம் முடியாது எனச் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் கஷ்டமானது. அப்போது நான் சோர்வாக உணர்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். இப்போது ஸ்டோக்ஸ், மெக்குல்லம் தலைமையின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com