மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கானை இந்திய அணிக்கு விரைவில் தேர்வு செய்யவேண்டும் என்று முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான திலீப் வெங்சர்கார் கூறியுள்ளார்.
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை அணியில் சர்ஃபராஸ் கான் 5 இன்னிங்ஸில் 704 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 140.83. மூன்று சதங்கள், ஒரு அரை சதம். கடந்த வருடம் 9 இன்னிங்ஸில் 928 ரன்கள் எடுத்தார். சராசரி - 154.66
இந்நிலையில் துபையில் ஓர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் வெங்சர்கார் கூறியதாவது:
இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் தற்போது இடம்பெற்றிருக்க வேண்டும். ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஒவ்வொரு முறையும் ஏராளமான ரன்கள் எடுக்கிறார். இதற்குப் பிறகும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றால் நான் ஆச்சர்யப்படுவேன். அவரை 12 வயது முதல் எனக்குத் தெரியும். அவரால் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட முடியும். அணிக்கு வெற்றி தேடித் தருவார். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்து விச்சு என இரண்டிலும் நன்குச் சமாளிப்பார். இதற்கு மேலும் அவர் என்ன செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.