முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி குறியதாவது:
முன்னாள் வீரர்களின் பணத்தேவையைக் கவனித்துக்கொள்வது முக்கியம். வீரர்களின் கிரிக்கெட் காலம் முடிந்த பிறகும் அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டியது பிசிசிஐயின் கடைமை. நடுவர்கள் - பாராட்டப்படாத நாயகர்கள். பிசிசிஐ அவர்களுடைய பங்களிப்பை உணர்ந்துகொண்டுள்ளது என்றார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது: தற்போது விளையாடும் அல்லது முன்னாள் வீரர்களின் நலன் மீது பிசிசிஐ அக்கறை கொண்டுள்ளது. அதனால் தான் அவர்களுடைய மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளோம். நடுவர்களின் பங்களிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்குச் செலுத்திய சேவைக்கு இதன் மூலமாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 900 பேர் இதனால் பலனடைவார்கள். இதில் 75% பேருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளோம் என்றார். மேலும் முன்னாள் வீரர்களுக்கான மருத்துவச் செலவுக்கான தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ. 5 லட்சமாக இருந்தது தற்போது ரூ. 10 லட்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முன்னாள் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதிய விவரங்கள்
* முன்னாள் முதல்தர வீரர்களுக்கு முன்பு ரூ. 15,000 வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ. 30,000 வழங்கப்படும்.
* முன்னாள் டெஸ்ட் வீரர்களுக்கு முன்பு ரூ. 37,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ. 60,000 வழங்கப்படும்.
* முன்பு ரூ. 50,000 ஓய்வூதியம் பெற்றவர்கள் இனிமேல் ரூ. 70,000 பெறுவார்கள்.
* சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய முன்னாள் வீராங்கனைகள் முன்பு ரூ. 30,000 பெற்றவர்கள் இனிமேல் ரூ. 52,500 பெறுவார்கள்.
* 2003-க்கு முன்பு முதல்தர கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றவர்கள், முன்பு ரூ. 22,500 பெற்றார்கள். இனிமேல் ரூ. 45,000 பெறுவார்கள்.