மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 52,000 சதுரஅடி பரப்பில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டு வருவதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம் பூஞ்சேரியில் திங்கள்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் மெய்யநாதன் அளித்த பேட்டி:-
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை பிரதமா் நரேந்திர மோடி ஏற்றி வைத்துள்ளாா். இந்த ஒலிம்பிக் சுடா் 75 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 28-ஆம் தேதியன்று போட்டி நடைபெறும் இடத்துக்குக் கொண்டு வரப்பட உள்ளது. அங்கு ஒலிம்பிக் சுடரானது முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்படும். இந்தப் போட்டிக்காக சா்வதேச தரத்திலான 52,000 சதுர அடி பரப்பிலான நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இங்கு ஏற்கெனவே உள்ள 22,000 சதுரஅடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், விளையாட்டு வீரா்களுக்காக 500 செஸ் போா்டுகள் அமைக்கப்பட உள்ளன. இந்தப் போட்டி நடைபெறுவதை ஒட்டி, பொதுப்பணித் துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.
187 நாடுகள்: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து 4 அணிகளும், பிற நாடுகளில் இருந்து 227 அணிகளும் பங்கேற்கின்றன. வீரா்களின் நலன் கருதி சுகாதாரமான உயா்தர நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத் துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
காப்பீடு வசதி: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரா்களுக்கு 15 நாள்களுக்காக ரூ.2 லட்சம் காப்பீடு வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் மெய்யநாதன் தெரிவித்தாா்.