இளம் வீரர் உம்ரான் மாலிக்கை சந்தித்த ஜம்மு - காஷ்மீர் ஆளுநர்
By DIN | Published On : 25th May 2022 09:37 AM | Last Updated : 25th May 2022 09:39 AM | அ+அ அ- |

இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் வீட்டிற்கு சென்ற ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் இந்தியா கண்டெடுத்த இளம் வீரர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உம்ரான் மாலிக் மிக முக்கியமானவர். தொடக்கத்தில் சற்று ரன்களை வழங்கினாலும், வேகத்தில் எவ்வித சமரசமும் அவர் செய்துகொள்ளவில்லை. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தொடர்ச்சியாகப் பந்துவீசி வருகிறார் உம்ரான் மாலிக்.
ஐபிஎல் போட்டியில் 21 விக்கெட்டுகளை எடுத்துள்ள உம்ரான் மாலிக், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை சென்ற துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிக்க | செஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா
இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் தெரிவித்ததாவது:
“நம் நாட்டிற்கு உம்ரான் மாலிக் பெருமை சேர்த்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் அரசு அவரது பயிற்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கவனித்துக் கொள்ளும். அவர் எப்போது அரசு வேலையில் சேர விரும்புகிறாரா, அப்போது அவருக்கு பணி வழங்கப்படும்.
அவரது சாதனை ஜம்மு - காஷ்மீர் முழுவதற்கும் ஒரு பெருமைக்குரிய தருணமாகும். யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த பல இளைஞர்கள் அவரது பாதையை பின்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.