தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 5-ம் தேதி புதுதில்லியில் கூடுகிறது.
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது. இது தில்லியில் ஜூன் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி ஜூன் 5-ம் தேதி தில்லி வரவுள்ளதாகத் தகவலறிந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுபற்றி மேலும் கூறியதாவது:
"இருஅணிகளும் உரிய விடுதிகளுக்கு வந்தவுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்வார்கள். இந்த தொடருக்கு பாதுகாப்பு வளையம் கிடையாது என்பதால், இருஅணிகளும் இங்கு வந்த பிறகு முறையாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்வார்கள். இதன்பிறகு, நாள்தோறும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதையும் படிக்க | நான் வேற மாதிரி : சஞ்சு சாம்சன்
அணிகள் ஜூன் 5-ம் தேதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். எனவே, மைதானம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கிறோம்."
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணியை கேஎல் ராகுல் வழிநடத்தவுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் உள்ளிட்டோருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (துணை கேப்டன் / விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக்.