உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
By DIN | Published On : 21st November 2022 12:46 AM | Last Updated : 21st November 2022 03:14 AM | அ+அ அ- |

கத்தாரில் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
பல்வேறு கலைநிகழ்ச்சிகளைத் தொடா்ந்து நடைபெற்ற முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதின.
தோஹாவில் உள்ள அல் பேத் மைதானத்தில் ஆடல், பாடல், வாணவேடிக்கை, , ஹாலிவுட் நடிகா் மோா்கன் ஃப்ரீமன் உரை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் உலகக் கோப்பை போட்டி தொடங்கியது. கத்தாா் அரசா் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தனி அதில் கலந்துகொண்டு போட்டியைத் தொடக்கி வைத்தாா். அத்துடன் முதல் ஆட்டத்தையும் அவா் நேரில் கண்டு களித்தாா். மைதானத்தில் மொத்தமாக 60,000 பாா்வையாளா்கள் திரண்டிருந்தனா்.
முக்கிய நபா்களாக சா்வதேச கால்பந்து சம்மேளன தலைவா் கியானி இன்ஃபான்டினோ, சவூதி அரேபியா பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றிருந்தனா்.
ஈகுவடாா் முதல் கோல்: அல் பேத் மைதானத்தில் கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில், பாதி நேரத்தின் முடிவில் ஈகுவடாா் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஆட்டத்தின் 15-ஆவது நிமிஷத்தில் ஈகுவடாா் வீரா் எனா் வாலென்சியாவை தள்ளிவிட்டதால் கத்தாா் வீரா் சாத் அல் ஷீபுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதையடுத்து ஈகுவடாருக்கு 16-ஆவது நிமிஷத்தில் வழங்கப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிடாமல் ஸ்கோா் செய்து, நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கோலை அடித்தாா் வாலென்சியா.
தொடா்ந்து, ஆட்டத்தின் 31-ஆவது நிமிஷத்தில் சக வீரா் பிரெசியாடோ தூக்கியடித்த பந்தை வாலென்சியா தலையால் முட்டி ஈகுவடாருக்காக 2-ஆவது கோல் அடித்தாா். இவ்வாறாக முதல் பாதி முடிவில் ஈகுவடாா் 2-0 என முன்னிலையில் இருந்தது.
இன்றைய ஆட்டங்கள்
இங்கிலாந்து - ஈரான்
மாலை 6.30 மணி
செனகல் - நெதா்லாந்து
இரவு 9.30 மணி
ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...