இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியின்போது திடீரென மைதானத்துக்குள் புகுந்த பாம்பினால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி குவஹாட்டியில் நடந்து கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி டாஸ் ஜெயித்து பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர். 7 ஓவர்கள் முடிவடைந்து அடுத்த ஓவருக்காக பேட்ஸ்மேன்கள் இடம் மாறும்போது தென்னாப்பிரிக்க வீரர்களிடத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் மைதானத்துக்குள் அழையா விருந்தாடியாக வந்த பாம்பே காரணம்.
மைதானத்திற்குள் பாம்பினைக் கண்ட தென்னாப்பிரிக்க வீரர்கள் அதனை கே.எல்.ராகுல் மற்றும் கள நடுவர்களிடம் காட்டினர். இதனையடுத்து, மைதானப் பணியாளர்கள் உடனடியாக மைதானத்திற்குள் வந்து பாம்பினை பிடித்துச் சென்றனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி தற்போது வரை 10 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 96 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.