ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடினாலே இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம்.
ஆனால் பெங்காலைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இதுவரை ஐபிஎல் போட்டியில் விளையாடாமலேயே இந்திய ஒருநாள் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணியில் 28 வயது முகேஷ் குமார் இடம்பெற்றுள்ளார்.
இதுவரை 31 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள முகேஷ் குமார், 113 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 18 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் 17 விக்கெட்டுகள். எகானமி - 5.17.
இந்திய அணியின் வாட்சப் குழுவில் முகேஷ் குமார் திடீரென இணைக்கப்பட்டார். அப்போதுதான் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு குறித்து அறிந்துள்ளார் முகேஷ் குமார்.
இந்திய அணிக்குத் தேர்வானது பற்றி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் முகேஷ் குமார் கூறியதாவது: செய்தியறிந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். எனக்கு உடனே என் தந்தையின் முகம் நினைவுக்கு வந்தது. அவர் உயிருடன் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். என் தாயும் ஒட்டுமொத்தக் குடும்பம் செய்தி கேட்டு அழுதார்கள். விளையாட்டில் கற்றுக்கொள்வதை நான் நிறுத்தவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.