ஐசிசி தலைவர் பதவிக்குத் தேர்வாக வாய்ப்புள்ள செளரவ் கங்குலி, இனிமேல் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் பிஸ்வரூப் டே கூறியுள்ளார்.
2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (67) தேர்வாகவுள்ளார்.
இதையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு செளரவ் கங்குலி போட்டியிட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான பிஸ்வரூப் டே கூறியதாவது:
ஐசிசி தலைவராக கங்குலி தேர்வானால் மகிழ்ச்சியே. அதேசமயம் அவருக்கு ஓர் அறிவுரை கூறுகிறேன். ஐசிசி தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால் அதன்பிறகு உள்ளாடை விளம்பரங்களில் நடிப்பதை கங்குலி தவிர்க்க வேண்டும். அதுபோன்ற விளம்பரங்கள் கிரிக்கெட் நிர்வாகியான அவருக்குப் பொருத்தமாக இல்லை என்றார்.