ஆசியக் கோப்பையின் முக்கியமான போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (செப்டம்பர் 1) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் முதலில் பேட் செய்து 183 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மெகதி ஹாசன் 38 ரன்கள், ஹொசைன் 39 ரன்கள், மொசடக் ஹொசைன் 9 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி முதலில் அட்டசகாமாக விளையாடியது. நிஷாங்கா 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். குஷால் மெண்டிஸ், கேப்டன் ஷனகா ஜோடி சேர்ந்து அருமையாக விளையாடினர். திடீரென மீண்டும் விக்கெட் விழத்தொடங்கியது. மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்ததும் ஹசரங்காவும் உடனே ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனகா 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சமிகா கருணாரத்னே 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன்னவுட் ஆகிவிட்டார். பெர்னாண்டோ 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை புரிந்தார்.
வங்கதேச அணியின் சார்பாக ஹொசைன் 3 விக்கெட்டுகளும், டஷ்கின் அஹமது 2 விக்கெட்டுகளும் மெஹதி ஹாசன், முஷ்தபிஷூர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். கடைசி நேரத்தில் வங்கதேச அணி பவுலர்கள் மோசமாக பந்து வீசினர்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துபையில் நடந்த போட்டியில் இதுதான் இலங்கையின் அதிகபட்ச சேஸிங் என்பதும் குறிப்பிடத்தக்கது. 60 ரன்கள் எடுத்த குஷால் மெண்டிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.