உம்ரான் மாலிக், தீபக் சஹார் போன்றோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படாதது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 72 ரன்கள் எடுத்தார். மதுஷங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த இலங்கை அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 52 ரன்களும் குசால் மெண்டிஸ் 57 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார்கள். சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 விக்கெட்டுகளும் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் எடுத்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
இந்திய அணியின் தேர்வு பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ட்விட்டரில் கூறியதாவது:
உம்ரான் மாலிக் எங்கே (150 கி.மீ. வேகம்), ஏன் தீபக் சஹார் அங்கு இல்லை (உயர் தரமான ஸ்விங் பந்துவீச்சாளர்), இவர்கள் வாய்ப்பு கிடைப்பதற்கான தகுதியைக் கொண்டவர்கள் இல்லையா, சொல்லுங்கள்! தினேஷ் கார்த்திக் ஏன் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறுவதில்லை? ஏமாற்றம் என்று கூறியுள்ளார்.