புதுச்சேரியில் நடைபெறும் துலீப் கோப்பைப் போட்டியில் இளம் வீரர் யாஷ் துல் 193 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
கிழக்கு - வடக்கு மண்டலங்கள் மோதும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டலம், 397 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராத் சிங் 117 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடி வரும் வடக்கு மண்டலம் 100 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 388 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. 19 வயது யாஷ் துல் 193 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த வருடம் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி வென்றபோது கேப்டனாக இருந்தார் யாஷ் துல். ரஞ்சி கோப்பைப் போட்டியின் அறிமுக ஆட்டத்தில் இரு சதங்கள் எடுத்தார். மேலும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் இரட்டைச் சதமும் எடுத்தார். தற்போது தனது முதல் துலீப் கோப்பை ஆட்டத்தில் சதமடித்து அசத்தியுள்ளார்.