வரலாறு படைக்க வரலாற்றை மீளுருவாக்க வேண்டும்: தோனி
By DIN | Published On : 25th September 2022 05:34 PM | Last Updated : 25th September 2022 05:34 PM | அ+அ அ- |

படம்: யூடியூப் | ஓரியோ இந்தியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி வரலாறு படைக்க, மீண்டும் வரலாற்றை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, இன்று (செப்.24) பிற்பகல் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதனால் ஒருசில ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், ஐபிஎல் ஓய்வு குறித்து தோனி அறிவித்துவிடுவாரோ என ரசிகர்கள் சிலர் கவலை அடைந்து இருந்தனர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் தோனி கூறியதை தற்போது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, 2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியி நிச்சயம் விளையாடுவேன் என கடந்த ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் தோனி தெரிவித்திருந்தார். சென்னை மக்கள் முன்புதான் எனது கடைசி ஆட்டம் இருக்கும் எனவும் தோனி குறிப்பிட்டிருந்தார்.
தற்போது வெளியான விடியோவில் தோனி செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்துக்கொண்டு தோனி இந்தியாவில் முதல் முறையாக ஓரியோ பிஸ்கட் அறிமுகப்படுத்தப்படுகிறதென கூறுவார். அதற்கு செய்தியாளர் அதெப்படி முன்னமே ஆகிவிட்டதேயென கூறுவார். இந்த நிகழ்வு பழைய தோனி - செய்தியாளர் சந்திப்பை போலவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தோனி, “ஓரியோ பிஸ்கட் இந்தியாவில் முதன்முறையாக 2011இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. தற்போது மீண்டும் இந்தியாவில் ஓரியோ அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே இதற்கான தொடர்பினை புரிந்துக் கொள்ளுங்கள். வரலாறு படைக்க, மீண்டும் வரலாற்றை உருவாக்க வேண்டும் ” என்பார். அதற்கு செய்தியாளர், “இந்த வருட உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்” என சொல்லுவார். அவர் அவ்வளவுதான் என்பதுடன் எழுந்து சென்றுவிடுவார்.