குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுகிறார் எனவும், அதன் காரணத்தினாலேயே அணி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து அணியில் சேர்க்கிறது எனவும் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஹால் அணியில் இடம் பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில்தான் அணியில் மீண்டும் இணைந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும், அந்தப் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையும் படிக்க: மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் பலி
இந்த நிலையில், குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுகிறார் எனவும், அதன் காரணத்தினாலேயே அணி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து அணியில் சேர்க்கிறது எனவும் சஹால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் ஆட்டத்திற்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்படுவது இருக்க வேண்டும். அதற்குத் தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். இது ஒன்றும் புதிதல்ல. ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு இருந்தால் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அணியில் இடம்பெற முடியும். குல்தீப் சிறப்பாக பந்து வீசுகிறார். அதன் காரணத்தினால் தான் அவருக்கு அணி நிர்வாகம் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்குகிறது. நான் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதனை நன்றாக பயன்படுத்திக் கொள்வேன் என்றார்.